மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர், பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருக்கிறார். அமைச்சர் கூறியதாவது: “பாலியல் பலாத்காரம், சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண்ணை பொறுத்து சமூக குற்றமாக கருதப்படுகிறது. சில சமயங்களில் அது சரி என்றும், சில நேரங்களில் தவறு என்றும் கூறப்படுகிறது. புகார் தெரிவிக்காமல் நடவடிக்கை எடுக்க முடியாது. பலாத்காரத்தைத் தடுக்க எந்தவொரு அரசாலும் முடியாது. சம்பவம் நிகழ்ந்த பின்பு, நடவடிக்கை மட்டுமே எடுக்க முடியும்.
பலாத்காரம் செய்யப்படுவதி லிருந்து தப்பிக்க, கராத்தே, ஜுடோ உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை பெண்கள் கற்றுக்கொள்ள வேண் டும். அப்போதுதான், பெண்களின் சம்மதம் இல்லாமல், யாராலும் அவர்களைத் தொட முடியாது.
திரைப்படங்களில் காட்டப்படும் ஆபாச நடனங்கள் சமுதாயத்தில் மோசமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. 2007-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இந்தித் திரைப்பட நடிகை ஒருவரின் கன்னத்தில் ஹாலிவுட் நடிகர் ஒருவர் முத்தமிட்டார். ஆனால், அந்த நடிகை அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதைத் தவறு என்றும் கருதவில்லை” என்றார்.
பாபுலால் கவுரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, அவர் உடனடியாக பதவியிலிருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
பாபுலால் கவுரின் கருத்துக்கும், கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் லலிதா குமாரமங்கலம் கூறியுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.