BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 3 June 2014

முல்லைப் பெரியாறு விவகாரம், ஒன்றுமே இல்லாதது. தமிழகத்துக்கு எப்போதுமே தண்ணீர் தர நாங்கள் தயார்!- கேரள முதல்வர் உம்மன் சாண்டி

கேரள முதல்வர் உம்மன் சாண்டி, பிரபல செய்தித்தாள் ஒன்றிற்கு பேட்டியளித்த போது, "நாங்கள் தமிழகத்துக்கு தண்ணீர் தருவது குறித்து அனைத்துவிதமான வகைகளிலும் உறுதி அளிக்கிறோம்." என்று கூறினார்.

முல்லை பெரியாறு விவகாரம் குறித்து பேட்டியின் போது அவர் பேசியதாவது:

முல்லைப் பெரியாறு விவகாரம், ஒன்றுமே இல்லாதது. நாங்கள் தமிழகத்துக்கு எப்போதுமே தண்ணீர் தரத் தயாராக இருக்கிறோம். ஆனால், அணையின் பாதுகாப்பு குறித்துதான் நாங்கள் அச்சப்படுகிறோம். அணை எப்போதுமே பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்ல முடியுமா? சாதாரண சூழ்நிலை என்றால் சரி. ஆனால், அசாதாரணமாக ஏதேனும் நடந்துவிட்டால் என்ன செய்வது? தவிர, அடிக்கடி நிலநடுக்கம் உணரப்படும் பூமியில் அச்சம் இல்லாமல் மக்கள் எப்படி வசிக்க முடியும், சொல்லுங்கள். அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவதால் அப்பகுதியின் பல்லுயிர் பெருக்கம் (Bio-diversity) கடுமையாக பாதிக்கப்படும். முல்லைப் பெரியாறு அணைக்காக 999 ஆண்டுகள் ஒப்பந்தம் போட்டிருப்பதால் அதனை அத்தனை ஆண்டுகள் பயன்படுத்த முடியுமா என்ன? ஒரு அணையின் ஸ்திரத் தன்மையைப் பொறுத்துதான் முடிவு எடுக்க வேண்டும். அப்படிதான் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முடிவு எடுத்தோம்.

நாங்கள் தமிழகத்துக்கு தண்ணீர் தருவது குறித்து அனைத்துவிதமான வகைகளிலும் உறுதி அளிக்கிறோம். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றித் தர தயார். புரிந்துணர்வு ஒப்பந்தமா? வாருங்கள் அதையும் போட்டுக்கொள்வோம். மத்திய அரசைக் கொண்டு முத்தரப்பு கமிட்டி அமைத்தும் தண்ணீர் தருவதை உறுதிப்படுத்த தயாராக இருக்கிறோம். இன்னும் வேறு எந்த வகையானாலும் சரி. அனைத்துக்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம். தண்ணீர் பகிர்மானம் விஷயத்தில் நாங்கள் எப்போதும் ஒப்பந்தத்துக்கு எதிராக செயல்பட மாட்டோம். அதனை விசாரித்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கிறேன்.

இவ்வாறு உம்மன் சாண்டி கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media