BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 12 September 2014

அணு ஆயுதங்களை மேம்படுத்த ரஷியா முடிவு

தனது அணு ஆயுதங்களையும் விமானப் படைத் திறனையும் மேம்படுத்த ரஷியா முடிவு செய்துள்ளது. உலகின் எந்தப் பகுதியிலும் தோழமை நாடுகளுக்கு ஆதரவாக உடனடித் தாக்குதல் நடத்தும் திட்டத்தை அமெரிக்கா அண்மையில் அறிவித்ததையடுத்து ரஷியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரஷியாவின் முடிவை துணைப் பிரதமர் திமித்ரி ரோகோஸின் வெளியிட்டார். அந்நாட்டின் பாதுகாப்புத் துறையை இவர் மேற்பார்வையிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத் தக்கது. இது தொடர்பாக அவர் கூறியதாக ரஷிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள விவரம்:

உலகின் எந்தப் பகுதியிலும் தாக்குதல் நடத்த இயல்கின்ற அமெரிக்க நேச நாடுகளின் வியூகத்தை எதிர்கொள்ளும் நோக்குடன், ரஷியா தனது அணு ஆயுதத் திறனை மேம்படுத்த முடிவு செய்திருக்கிறது. ரஷியாவின் ஏவுகணைத் திறன், கடற்படை ஆகியவற்றையும் மேம்படுத்துவோம். மேலும், விமானப் படைத் திறன், விண்வெளிப் பாதுகாப்புத் திறன் ஆகியன மேம்படுத்தப்படும் என்றார். முன்னதாக, அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை தொடர்பான செலவுகள் குறித்த கூட்டம் தலைநகர் மாஸ்கோவில் புதன்கிழமை நடைபெற்றது. அதிபர் விளாதிமிர் புதின் இந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கினார். மீண்டும் நேட்டோவை சக்தி வாய்ந்த அமைப்பாக உருவாக்கும் நோக்கத்துடன் உக்ரைன் பிரச்னையை மேற்கத்திய நாடுகள் தூண்டிவிடுகின்றன என்று புதின் குற்றம்சாட்டினார்.

"கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ படைகள் குவிக்கப்படுகின்றன. ஐரோப்பா, அலாஸ்கா பகுதிகளைப் பாதுகாப்பதாகக் கூறிக் கொண்டு அமெரிக்க ஏவுகணைகள் ஈடுபடுத்தப்படுகின்றன. உலகின் எப்பகுதியிலும் உடனடித் தாக்குதல் என்ற அடிப்படையில் புதிய அச்சுறுத்தல் எழுந்துள்ளது.
மேலும், இதனை விளக்குவதற்தாக ஒரு சித்தாந்தத்தை உருவாக்கி வருகிறார்கள். சர்வதேச அளவில் ஆயுதங்களை முடக்கும் விதத்திலான ஒரு தாக்குதல் என்கிற ரீதியிலான சித்தாந்தம் உருவாக்கப்படுகிறது என்று புதின் கூறினார். உலகின் எந்தப் பகுதியிலும் உள்ள இலக்கை ஒரே மணி நேரத்தில் அடையும் தாக்குதல் திட்டத்தை அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகம் வகுத்து வருகிறது. இந்தத் தாக்குதலுக்காக அணு ஆயுதம் அல்லாத வழக்கமான ஆயுதங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அவற்றை எதிர்கொள்வதற்கான ஆயுதங்களை ரஷியா உருவாக்க வேண்டி வரும் என்று ரஷிய பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் யூரி போரிúஸாவ் முன்னதாக கூறினார். புதிய ஆயுதங்களை எதிர்கொள்ள வேண்டி, ரஷியாவும் புதிய ரக ஆயுதங்களை உருவாக்கும் கட்டாயத்துக்கு தள்ளப்படும். தற்காப்புதான் எங்கள் நாட்டின் கொள்கை. அதில் எந்த மாற்றமும் கிடையாது என்றும் அவர் கூறினார்.

போர்ப் பயிற்சிக்கு புதின் உத்தரவு
ரஷியாவின் கிழக்குப் பகுதியில் ராணுவம் போர்ப் பயிற்சி மேற்கொள்ள அதிபர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டார். உள்நாட்டில் காலை 10 மணிக்கு இந்த உத்தரவை புதின் வெளியிட்டார் என ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷொய்கு தொலைக்காட்சியில் தெரிவித்தார். அந்நாட்டு ராணுவத்தினர் தயார் நிலையில் இருப்பதை உறுதி செய்யும் நோக்கத்துடன் நடத்தப்படும் இரண்டாவது போர் பயிற்சி இது என்பது குறிப்பிடத் தக்கது. உக்ரைனுக்கும் அந்நாட்டின் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் ரஷிய ராணுவம் போர் பயிற்சி மேற்கொண்டது. அந்தப் பயிற்சியில் 65,000 வீரர்கள் கலந்து கொண்டனர்.

அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள ராணுவத்தினர் போருக்குத் தயாரான நிலையில் இருக்கும் விதமாக இப்போதைய பயிற்சி மேற்கொள்ளப்படும். ஒரு வார காலம் நடைபெறவுள்ள பயிற்சியின்போது, எதிரிகளின் கடற்படையை ரஷிய கடற்படையின் பசிபிக் படைப் பிரிவு முறியடிக்கும்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media