BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 17 April 2014

16 ஆண்டுகளாக நடந்து வந்த சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில், திமுக எம்.பி. செல்வகணபதி உள்பட 5 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை

16 ஆண்டுகளாக நடந்து வந்த சுடுகாட்டு கூரை ஊழல் வழக்கில்,  திமுக எம்.பி. செல்வகணபதி உள்பட 5 பேருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை - சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 1995, 1996-ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின்போது, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சராக டி.எம்.செல்வகணபதி இருந்த போது, ஜவஹர் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சுடுகாடுகளுக்கு கூரை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுடுகாட்டு கூரைகள் அமைப்பதில் ஊழல் நடந்ததாக, அப்போதைய ஆட்சியர் உமாசங்கர் புகார் அளித்தன் பேரில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. அப்போதைய அமைச்சர் செல்வகணபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஜெ.டி.ஆச்சார்யலு, அப்போதைய இயக்குநர் எம்.சத்யமூர்த்தி, திட்ட இயக்குநர் எம்.கிருஷ்ணமூர்த்தி, கூட்டுறவு சங்க செயல் அலுவலர் ஏ.ஆரோக்கியராஜ் மற்றும் சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த டி.பாரதி ஆகியோர் மீது சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர். அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கூட்டாக சேர்ந்து செயல்பட்டதன் மூலம் அரசுக்கு ரூ.23 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ போலீசார் குற்றம்சாட்டினர். கூட்டுறவு சங்க செயல் அலுவலர் ஆரோக்கியராஜ் உயிரிழந்து விட்டதால், மற்ற 5 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

சிபிஐ வழக்குகளுக்கான சென்னை 9-வது கூடுதல் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.மாலதி இன்று அளித்த தீர்ப்பில், அப்போதைய அமைச்சர் செல்வகணபதி, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான ஜெ.டி.ஆச்சார்யலு, எம்.சத்யமூர்த்தி, மாவட்ட திட்ட அதிகாரி எம்.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தங்கள் பதவியின் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினர். அத்துடன், பாரதியோடு சேர்ந்து அவர்கள் அரசுக்கு ரூ.23 லட்சம் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டும் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.எனவே, அவர்கள் 5 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

அதேவேளையில், இந்த வழக்கில் தண்டனை பெற்றவர்கள் மேல் முறையீடு செய்ய வசதியாக தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media