குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உத்தரவின் பேரில் ஒரு இளம்பெண் காவல்துறையை வைத்து வேவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் கமிஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி, இந்த கமிஷனுக்கான நீதிபதியை நியமிக்க அரசு முடிவு செய்தது. அதுவும் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் 16-ம் தேதிக்கு முன்னதாக நீதிபதியை நியமிக்க அரசு திட்டமிட்டது. அரசின் இந்த அவசர முடிவிற்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது. காங்கிரஸ் கட்சியின் கூட்டணியிலும் எதிர்ப்பு கிளம்பியதால், அரசு தனது முடிவை கைவிட்டது.
இதனை இன்று உறுதி செய்த மத்திய அமைச்சர் கபில் சிபல், எங்கள் அரசாங்கம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்ற எண்ணத்தை உருவாக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார். இந்நிலையில், வேவு பார்க்கப்பட்டது தொடர்பாக எந்த விசாரணையும் நடத்தக்கூடாது என்று அந்த பெண்ணின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
விசாரணை நடத்துவது, திருமணமாகிவிட்ட தன் மகளின் தனியுரிமையை மீறுவதாகும் என்று அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.