BREAKING NEWS

Ads

உலகம்

சற்றுமுன்

முக்கிய செய்திகள்

சினிமா

தமிழகம்

newsscroll

Monday, 15 December 2014

உணவே மருந்து : தேவையில்லாத கெட்ட நீர் உடம்பிலிருந்து சிறுநீர் வழியாக வெளியேற

தினமும் பப்பாளிக்காயைச் சாப்பிட்டு வரலாம்.



சிறுநீர் புறவழி புண் ஆற: 5 ஆவாரம் பூ மென்று சாப்பிட்டு வர குணமாகும்.




சிறுநீரக வியாதி குணமாக: சுரக்காய்ச் சாறு, எழுமிச்சை சாறு கலந்து அருந்தி வர பலன் அடையலாம்.

இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்த ஆணையத்தின் ஆலோசனைக் குழுவில் ஜப்பானியர்

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை ஆணையத்துக்கு ஆலோசனை வழங்கும் குழுவில் ஜப்பானிய சட்ட நிபுணர் ஒருவரை அதிபர் ராஜபட்ச நியமித்தார். முப்பதாண்டுகளாக விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கையில் நிகழ்ந்து வந்த சண்டையில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரனகமா தலைமையில் அதிபரின் சிறப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்துக்கு ஆலோசனை வழங்க, ஏற்கெனவே வெளிநாட்டவர் 5 பேரைக் கொண்ட குழுவை ராஜபட்ச நியமித்துள்ளார். டெஸ்மண்ட் டிசில்வா, ஜெஃப்ரி நைஸ் (பிரிட்டன்), டேவிட் கிரேன் (அமெரிக்கா), அவதாஷ் கெளசல் (இந்தியா), அகமது பிலால் (பாகிஸ்தான்) ஆகிய ஐவரோடு இப்போது, ஆறாவதாக ஜப்பானைச் சேர்ந்த சட்ட நிபுணர் மோட்டூ நொகுச்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கம்போடியாவில் சிறப்பு நீதிமன்றத்தில் சர்வதேச நீதிபதியாகச் செயல்பட்டவர். நெதர்லாந்தில் உள்ள வரும் சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தின் "பாதிக்கப்பட்டோர் நிவாரண அறக்கட்டளை நிதி' நிர்வாகக் குழுவின் தலைவராக உள்ளார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது 20,000 பேருக்கு மேல் காணாமல் போனது தொடர்பாக, இலங்கை அதிபர் அமைத்துள்ள சிறப்பு ஆணையத்துக்குப் புகார்கள் வந்துள்ளன. இதில் 5,000-க்கும் மேலானவை, காணாமல் போன ராணுவத்தினர் தொடர்பான புகார்கள். போர் நடைபெற்ற வட இலங்கைப் பகுதிகளான கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மன்னார் ஆகிய பகுதிகளில் அந்த ஆணையம் பொது விசாரணைகள் மேற்கொண்டது. மேலும், கிழக்கில் மட்டக்களப்பு பகுதியிலும் பொது விசாரணை மேற்கொண்டது. இந்த விசாரணைகளின்போது, காணாமல் போனவர்கள் குறித்து அவர்களது குடும்பத்தினர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில், சுதந்திரமான ஒரு விசாரணை அமைப்பு மேலும் விசாரணை மேற்கொள்ளும்.

இறுதிப்போரின்போது மனித உரிமை மீறல்கள் இருந்தது தொடர்பான புகார்களையும் இந்த ஆணையமே விசாரிக்கும் என, அதிபர் ராஜபட்ச கடந்த ஜூலை மாதம் அறிவித்தார்.ஐ.நா. மனித உரிமைகள் ஆணையமானது, சர்வதேச விசாரணையை மேற்கொள்ளும் என அறிவித்ததைத் தொடர்ந்து, இலங்கை தனது விசாரணை ஆணையத்தை அமைத்தது.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற வேண்டும் : மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் கோரிக்கை

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார். மதுரையில் அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது: மக்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் தமாகாவினர் செயல்படுவர். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி தமிழரின் பாரம்பரிய விளையாட்டு. இதை வெளி மாநிலத்தவரும், வெளிநாட்டவரும் விரும்பிப் பார்க்க வருகிறார்கள். தற்போது ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. எனவே, ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அனுமதியைப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றார். ஜி.கே.வாசனுடன் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன், பீட்டர் அல்போன்ஸ், யுவராஜா உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

விருதுநகர்: விருதுநகரில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: காமராஜரின் வழியில் தமாகாவை ஏற்படுத்தி தமிழகத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்குவோம். கட்சியில் 50 லட்சம் பேரை உறுப்பினர்களாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் கட்டண உயர்வுக்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. அதனால் அரசு அதை உடனே திரும்ப பெற வேண்டும் என்றார்.

புதிய அணை ஆய்வுக்கு கேரளத்துக்கு அனுமதி : கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்

முல்லைப் பெரியாறில் கேரளம் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கருணாநிதி: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய வன விலங்குகள் வாரியம் அனுமதி அளித்துள்ளது. இது தமிழகத்துக்குப் பாதகம் விளைவித்துவிடும் என்பதுடன் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையே புறக்கணிக்கும் செயலாக அமைந்துவிடும். தமிழக அரசின் கருத்தைக் கேட்காமல், கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இதுபோன்ற செய்திகள் வரும்போதெல்லாம் பிரதமருக்கு, தமிழக முதல்வர் கடிதம் எழுதுவதுடன் கடமை முடிந்துவிட்டதாகக் கருதுகிறார். தமிழகத்தை பாதிக்கும் இதுபோன்ற பிரச்னைகளில், அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளோடு பிரதமரை முதல்வர் நேரில் சந்தித்து வலியுறுத்த வேண்டும். அப்போதுதான் நல்ல விளைவுகள் ஏற்படும். ஜி.ராமகிருஷ்ணன்: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு மேற்கொள்ள கேரளத்துக்கு அனுமதி வழங்கி இருப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதாகும். இது தமிழகத்தின் 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தில் அச்சத்தை ஏற்படுத்துவதாகும். எனவே, இந்த அனுமதியை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். தி.வேல்முருகன்: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு நடத்த கேரளத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். தமிழக மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையில் மத்திய அரசு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது.

பயணிகள் ரயில் கட்டணம் மீண்டும் உயருகிறது

பயணிகள் ரயில் கட்டணம் மீண்டும் உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு, நாடாளுமன்றத்தில் அடுத்த ரயில் பட்ஜெட் தாக்கலின்போது அறிவிக்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து, ரயில்வே அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: ரயில்வே கொள்கைப்படி, எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றுக்கு ஏற்ப ஆண்டுக்கு இருமுறை பயணிகள் ரயில் கட்டணமும், சரக்கு ரயில் கட்டணமும் உயர்த்தப்படும். அதன்படி, கடந்த ஜூன் மாதத்தில் பயணிகள் ரயில் கட்டணம் 4.2 சதவீதமும், சரக்கு ரயில் கட்டணம் 1.4 சதவீதமும் உயர்த்தப்பட்டன. அதன்பிறகு, இம்மாதத்தில் கட்டணம் மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆனால், மாற்றியமைக்கப்படவில்லை. இந்நிலையில், டிசம்பர் மாதத்தில் மாற்றியமைக்க வேண்டிய கட்டணம் தொடர்பான அறிவிப்பு, நாடாளுமன்றத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது வெளியிடப்பட உள்ளது.

கடந்த 4 மாதங்களில், ரயில்வேயில் எரிபொருள்களுக்கு ஆகும் செலவு 4 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. எனவே, இதற்கேற்ப கட்டணத்தை உயர்த்த வேண்டியிருக்கிறது என்றார் அவர். இதே தகவலை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பாபுவும் அண்மையில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ரயில்வேயின் சுமைகளில் சிலவற்றை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ரயில் கட்டணம் உயர்த்தப்படுமா? எனக் கேட்கிறீர்கள். இதை மறுப்பதற்கில்லை. இருப்பினும், ரயில் கட்டணம் உயர்த்தப்படுவதற்கு முன்பு, பயணிகளுக்கான வசதிகள் மேம்படுத்தப்படும். பயணிகளின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்து கொள்ளப்பட மாட்டாது. ரயில்வே திட்டங்களுக்கு பெரிய அளவில் முதலீடு தேவைப்படுகிறது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தி முடிப்பதற்கு, ரூ.6 லட்சம் கோடி முதல் ரூ.8 லட்சம் கோடி வரை நிதி தேவைப்படுகிறது. ஆனால், அதற்கான நிதி ரயில்வேயிடம் இல்லை.

ரயில்வே பட்ஜெட்டில் தங்கள் தொகுதியில் செயல்படுத்த வேண்டிய திட்டம் குறித்து எம்.பிக்கள் தெரிவித்து வருகின்றனர். அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற ரூ.20,000 கோடி ஆகும். இதுபோன்ற காரணங்களுக்காக ரயில்வேயின் சுமைகளை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கிறது என்றார் அவர். ரயில்வே துறை அமைச்சராக சுரேஷ் பிரபு பதவியேற்ற பிறகு, நிதி நெருக்கடியில் இருக்கும் ரயில்வேயை லாபகரமானதாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பயணிகள் கட்டணத்தைப் பொருத்தவரை ரூ.26,000 கோடி அளவுக்கு அரசால் மானியமாக வழங்கப்படுகிறது. அதேசமயம், பயணிகளின் வருகையோ கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைந்துள்ளது. அதாவது, கடந்த ஏப்ரல் - நவம்பர் மாதங்களுக்கு இடையேயான காலத்தில், பயணிகளின் வருகை, கடந்த ஆண்டில் இதேகால கட்டத்தில் பதிவு செய்யப்பட்டதை விட 1.43 சதவீதம் குறைவாகும். இதுபோன்ற காரணங்களால், பயணிகள் ரயில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

போதைப் பொருள் தவிர்ப்பு உதவி மையம் : பிரதமர் மோடி அறிவிப்பு

"இளைஞர்களிடையே பரவும் போதைப் பொருள் பழக்கத்தை தவிர்க்க சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் கூட்டாகச் செயல்பட வேண்டும்' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். போதைப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு உதவ கட்டணமில்லா "உதவி மையம்' விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக வானொலியில் "மனதோடு பேசு' எனும் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்று, நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை: இளைஞர்களிடையே பரவும் போதைப்பழக்கம் தேசத்தின் வலியாகும். இளைஞர்கள் போதைக்கு அடிமையாகியுள்ளனர். அவர்கள் போதைப்பொருள்கள் பயன்படுத்துவதை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். போதைப் பழக்கத்துக்கு ஆளாவதால் இருள் சூழும், அழிவும், பேரழிவும் ஏற்படும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, திரைப்பட பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் உள்பட பிற துறைகளில் பிரபலமானவர்களைக் கொண்டு "போதை இல்லாத இந்தியா' எனும் பிரசாரம் நடத்த முயற்சி மேற்கொள்வேன். மது இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்.

நீண்ட நாள்களாக, இளைய தலைமுறையினரை நான் கவனித்துக் கொண்டிருக்கிறேன். சிலர் அழிவை ஏற்படுத்தும் புதைகுழிக்குள் விழுந்துள்ளனர். போதைப்பொருள் ஒரு பேரழிவாகும். இது மனம், சமூகம், மருத்துவம் சார்ந்த ஒரு பிரச்னையாகும். இந்தப் பிரச்னையைப் போக்க குடும்பத்தினர், நண்பர்கள், சமூகத்தினர், அரசு, சட்டத் துறையினர் என அனைவரும் கூட்டாகச் செயல்பட வேண்டும். இந்தப் பிரச்னை குறித்து ஆலோசனை வழங்க "கட்டணமில்லா உதவி மையம்' தொடங்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டுள்ளேன். போதைப்பழக்கத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் ஓர் சிறப்பு நிகழ்ச்சியைத் தொடங்கவும் அறிவுறுத்தியுள்ளேன். போதைப்பொருள் குறித்து நான் உரையாற்றுவேன் என்று முன்னர் வானொலி நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தேன். அதுதொடர்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடிதங்கள், மின்னஞ்சல்கள் பொதுமக்களிடம் இருந்து வந்துள்ளன. அவை, போதைப்பொருளுக்கு எதிரான ஆலோசனைகள் ஏற்கெனவே தொடங்கிவிட்டது என்பதையே காட்டுகின்றன.

இளைஞர்கள் தங்களுக்கு போதைப் பழக்கம் இல்லை என்பதைக் கூறிகொள்ள ஆர்வம் காட்ட வேண்டும். போதைப்பொருளைப் பயன்படுத்துவது நவநாகரிகம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அவற்றில் உண்மையில்லை. அவை உங்களை பேரழிவுக்கே அழைத்துச் செல்லும். போதைப்பொருள்களை விலைகொடுத்து வாங்கும் இளைஞர்களுக்கு அந்தப் பணம் தீவிரவாதத்துக்கு பயன்படுகிறது என்பது தெரியுமா? இந்தியாவை நேசிக்கும் நீங்கள் எப்படி தீவிரவாதத்துக்கு உதவலாம்? பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கென நேரத்தை ஒதுக்கி அவர்கள் இலக்கை நிர்ணயிக்கவும், அதை அடையவும் செயல்பட வேண்டும். அவர்கள் உங்களிடம் மனம் திறந்து பேசவும், அவர்கள் தவறான பாதையில் செல்லாதவாறு இருக்கும் வகையிலும் பெற்றோர் செயல்பட வேண்டும் என்றார் மோடி. மோடி பெருமிதம்: சமீபத்தில் கண்பார்வையற்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் மோடியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இதை உரையின் போது குறிப்பிட்ட மோடி அந்த அணியைப் பாராட்டிப் பேசினார். அவர் மேலும் பேசியதாவது:

ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், மும்பை அணியை எதிர்த்து விளையாடி ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் அணி வெற்றிபெற்றது. சமீபத்தில்தான் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் வெள்ளப்பெருக்கால் பாதிப்படைந்தது. அந்த மாநிலத்தின் விளையாட்டு மைதானங்கள் நீரில் மூழ்கின. இந்த இடையூறுகள் இருந்த பின்னரும் அந்த மாநில அணி கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றது. கிரிக்கெட் போட்டித் தொடரில் இது ஒரு உயர்ந்த வெற்றியாகும். அந்த அணியை நான் பாராட்டுகிறேன். ஜூன் 21}ஆம் தேதியை "சர்வதேச யோகா தினமாக' அறிவிக்க வேண்டும் என்று ஐநா சபையில் இந்தியா வலியுறுத்தியது. இத்தீர்மானத்தை ஐநா சபை ஏற்று அறிவித்துள்ளது. இதற்கு 177 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அதுபோல, நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளை சர்வதேச தினமாகவும் ஐநா அறிவிக்கவுள்ளது. இத்தீர்மானத்துக்கு 166 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன என்றார் அவர்.

Sunday, 14 December 2014

உணவே மருந்து : இஞ்சியின் மகத்துவம்

இறைவனுடை படைப்புக்களின் மூலம் நேரடியாக விளையக் கூடிய பொருட்களிடம் எப்போதும் தொடர்பில் இருங்கள். மனிதனுடைய சொற்ப்ப அறிவுக்கு உட்பட்டு தயாரிக்கப் படும் உணவு பண்டங்களை முடிந்த வரை தடுத்துக் கொள்ளுங்கள். சாஸ், மையோனஸ், பீசா, பர்கர், சேன்வெஜ், மைதா,ஜீனி இதுபோல் உங்களுக்கு தெரிந்த இன்னும் பல பொருட்களை விட்டு உங்களை தடுத்துக் கொள்ளுங்கள். சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்ட அலோபதி என்ற வைத்தியம் செய்யும் முறை இதன் பக்கமே நீங்கள் போக மாட்டீர்கள் இறைவன் நாடினால். இஞ்சி துண்டை தேனில் ஊறவைத்து 120 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் என்ற பேச்சுக்கே உங்கள் வாழ்க்கையில் இடம் கிடையாது.

முதல் டெஸ்ட் : வெற்றி வாய்ப்பை நழுவ விட்டது இந்தியா

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், கேப்டன் விராட் கோலி, முரளி விஜய் ஆகிய இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும், பின் வரிசை பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால், இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, அடிலெய்டில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 517/7 ரன்களில் டிக்ளேர் செய்தது. இந்தியா 444 ரன்கள் எடுத்தது. நான்காம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்திருந்தது. சனிக்கிழமை ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்ததால், இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 364 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. தொடக்க வீரர் ஷிகர் தவன் 9 ரன்கள் எடுத்திருந்தபோது மிச்செல் ஜான்சன் பந்தில் விக்கெட் கீப்பர் ஹாடினிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால், "ரீப்ளே'யில் பந்து அவரது தோள்பட்டையில் பட்டுச் சென்றது தெரியவந்தது.

சிறிது நேரம் தாக்குப்பிடித்த புஜாரா 21 ரன்களில், சுழற்பந்து வீச்சாளர் நாதன் லியான் பந்தில் வீழ்ந்தார். பின்னர் விராட் கோலியும், முரளி விஜயும் இணைந்து பொறுப்புடன் ஆடினர். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து முன்னேற, இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் நம்பினர். கேப்டனாக அணியை முன்னின்று வழிநடத்திக் கொண்டிருந்தார் விராட் கோலி. அவருக்கு முரளி விஜயும் சிறந்த ஒத்துழைப்பை அளித்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக 99 ரன்கள் எடுத்திருந்தபோது, நாதன் லியான் பந்தில் எல்டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து, ஐந்தாவது டெஸ்ட் சதத்தை அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டு வெளியேறினார் முரளி விஜய். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரஹானே டக் அவுட்டிலும், ரோஹித் ஷர்மா 6 ரன்களிலும் ஆட்டமிழந்து "கிலி' ஏற்படுத்தினர். ரித்திமான் சாஹா 16 ரன்களுடன் திருப்தி அடைந்தார். ஆனாலும், மறுமுனையில் விராட் கோலி டெஸ்ட் அரங்கில் தனது எட்டாவது சதத்தை அடித்தார்.

சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த விராட் கோலி கடைசியாக நாதன் லியான் சுழலில் சிக்கினார். அவர் 175 பந்துகளில் 16 பவுண்டரி, 1 சிக்ஸர் உள்பட 141 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர். அதற்கு பின் வந்த, கரண் ஷர்மா, முகமது ஷமி, வருண் ஆரோன், இஷாந்த் ஷர்மா ஆகியோர் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. இதனால், 315 ரன்களில் இந்தியா ஆல்அவுட்டானது. ஆஸ்திரேலியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நாதன் லியான் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு

தருமபுரியில் பள்ளிகளுக்கு இடையேயான டி.டி.சி.ஏ. கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள அணிகள் வருகிற டிச.18ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம். இதுகுறித்து மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் எஸ்.மார்ட்டின்ராஜ் வெளியிட்ட அறிக்கை: இம்மாத கடைசி வாரத்தில் 14 வயதுக்குள்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நாக்-அவுட் முறையில் நடைபெற உள்ளது. தருமபுரி வருவாய மாவட்டத்துக்குள்பட்ட பள்ளிகள் மட்டுமே பங்கேற்கலாம். வெற்றி பெறும் அணிகளுக்கு ரொக்கப்பரிசு, கோப்பை அளிக்கப்படும். போட்டியில் பங்கேற்கவுள்ள அணிகள் வருகிற டிச.18ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பாக மேலும் விவரம் வேண்டுவோர் 94434-64935 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

தொடர் அங்கீகாரத்துக்கு காத்திருக்கும் 215 தனியார் பள்ளிகள்

கோவை மாவட்டத்தில் 215 நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்காமல் கல்வித்துறை அதிகாரிகள் அலைக்கழிப்பதாக தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் நலச்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது. இந்த அமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவையில் சனிக்கிழமை நடைபெற்றது. மாநில பொதுச் செயலர் ஜி.கிருஷ்ணராஜ் தலைமை தாங்கினார். மாநில அமைப்புச் செயலர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், மாவட்டத் தலைவர் சாவித்திரி, பொருளாளர் பிரேமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஜி.கிருஷ்ணராஜ் கூறியது: கோவை மாவட்டத்தில் மொத்தம் 225 நர்சரி, பிரைமரி பள்ளிகள் உள்ளன. இவற்றில் 140 பள்ளிகளுக்கு இந்த ஆண்டு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அதேபோல் மொத்தம் உள்ள 248 மெட்ரிக் பள்ளிகளில் 75 பள்ளிகளுக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. இது தொடர்பான கோப்புகளைக் கல்வித்துறை இயக்குநரகத்துக்கு அனுப்பி வைத்தால், விளக்கம் அளிக்கும்படி கேட்டு திருப்பி அனுப்புகின்றனர்.

அவர்கள் கேட்கும் விவரங்களைப் பூர்த்தி செய்து அனுப்பினால் வேறு ஏதேதோ காரணங்களைக் கூறி அவற்றை கிடப்பில் போட்டுவிடுகின்றனர். இதேபோல் மாநிலம் முழுவதிலும் நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் இப்பள்ளிகளில் பயிலும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் பொதுத் தேர்வு எழுதுவது கேள்விக்குறியாகி உள்ளது. பாதிக்கப்படும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டால் அது சட்டம் - ஒழுங்கு பிரச்னையாக மாறவும் வாய்ப்பு உள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளிகளில் நேரடி ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள் மாணவர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அங்கீகாரம் வழங்க முடியாது என்று காரணம் கூறுவதை ஏற்க முடியாது.

தொடக்கக் கல்வி, மெட்ரிக் அலுவலகங்களில் பொறுப்பு அலுவலர்களே இருப்பதால் இந்தப் பிரச்னை தொடர்பாக எங்களுக்கு சரியான விவரங்களை அறிய முடிவதில்லை. எனவே அனைத்து அலுவலகங்களுக்கும் நிரந்தர அலுவலர்களை நியமிக்க வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பள்ளிகளுக்கு உடனடியாக தொடர் அங்கீகாரம் வழங்கக் கோரி வரும் 23-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணியளவில் தொடக்கக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். தொடர் அங்கீகாரம் கோரியும், கடந்த 2 ஆண்டுகளாக தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 25 சதவீத இலவச சேர்க்கைக்கான நிதியை உடனடியாக வழங்க வேண்டும். மாநிலம் முழுவதிலும் சுயநிதி பள்ளிகளின் ஆசிரியர்கள் தனியாரால் தாக்கப்பட்டு வருவதால், சுயநிதி பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளைச் சந்தித்து வலியுறுத்த உள்ளதாக கிருஷ்ணராஜ் மேலும் கூறினார்.

அங்கீகாரம் நிறுத்தப்படவில்லை: மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர்இதற்கிடையே தனியார் பள்ளிகளுக்கான தொடர் அங்கீகாரத்தை நிறுத்தி வைக்கவில்லை என்று மெட்ரிக் பள்ளிகளின் இயக்குநர் ஆர்.பிச்சை தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக கோவைக்கு சனிக்கிழமை வந்த அவரிடம் தொடர் அங்கீகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். கோவையில் மட்டுமன்றி தமிழகம் முழுவதிலும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் தொடர்ந்து வழங்கப்படுவதாகவும், யாருடைய விண்ணப்பமும் நிறுத்தி வைக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். 25 சதவீத இலவச சேர்க்கை நடத்திய தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது குறித்து அரசுதான் விளக்கம் அளிக்க முடியும். இது குறித்த அறிவிப்பை நாளிதழ்கள் மூலம் அரசே தெரிவிக்கும் என்றார் அவர்.

முல்லைப் பெரியாறு: புதிய அணை ஆய்வுக்கு அனுமதி : மத்திய அரசுக்கு முதல்வர் கண்டனம்

முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள தமிழக அரசு, இது நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சனிக்கிழமை எழுதிய கடித விவரம்: முல்லைப் பெரியாறு பகுதியில் புதிதாக ஒரு அணையைக் கட்ட கேரள அரசு உத்தேசித்துள்ள இடத்தில் சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகத்தின் கீழ்வரும் தேசிய வன விலங்குகள் வாரியமானது அனுமதி அளித்துள்ளதாக அதனுடைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக, 5 நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வானது, கடந்த மே மாதம் தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், கேரள அரசு புதிய அணை கட்டுவதற்கு திட்டவட்டமாக தடை விதித்து உத்தரவிட்டது. முன்னதாக, முல்லைப் பெரியாறு அணையின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான குழுவை நீதிமன்றம் அமைத்தது.

அணையை ஆய்வு செய்த அந்தக் குழுவானது அணை உறுதித்தன்மையுடனும், பூகோள ரீதியாகவும், வடிவமைப்பு வகையிலும் பலமாக இருப்பதாகத் தெரிவித்தது. மேலும், அணையின் நீர் அளவை 142 அடி வரை உயர்த்தலாம் எனவும், புதிய அணை கட்டும் கோரிக்கையை கேரள அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கூறியது. நீதிபதி தலைமையிலான குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில், உச்ச நீதிமன்றமானது முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்குத் தடை விதிக்கும் உத்தரவை கடந்த மே மாதம் அளித்தது. இந்த விவகாரம் முடிவுற்று, கேரளத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், புதிய அணை கட்டுவதற்காக தேசிய வனவலங்குகள் வாரியத்திடம் அந்த மாநில அரசு மீண்டும் விண்ணப்பித்துள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்கும் போது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் குறித்த முழுவிவரங்களையும் தெரிவிக்கவில்லை.

நீதிமன்ற உத்தரவை மீறும் செயல்: முல்லைப் பெரியாறு அணையானது பூகோள, நீரியியல் ரீதியாக வலுவானது என கண்டறியப்பட்டதுடன், அணையில் நீரின் அளவை 142 அடிக்கு உயர்த்திக் கொள்ள தமிழகத்துக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிதாக மற்றொரு அணையைக் கட்டுவதற்கான சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள கேரளத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு விரோதமானது. எனவே, தேசிய வன விலங்குகள் வாரியத்தின் நிலைக்குழுவானது புதிய அணையைக் கட்டுவதற்கான ஆய்வை மேற்கொள்ள கேரளத்துக்கு அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். கடந்த 1886-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட குத்தகை ஒப்பந்தத்தின்படி, முல்லைப் பெரியாறு அணையானது தமிழக அரசுக்குச் சொந்தமாகும். அது மாநில அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது. அணையில் தமிழகத்துக்குள்ள உரிமையானது, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

குத்தகை ஒப்பந்தம், அணையின் பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளின் மூலம் முடிவுக்கு வந்துள்ளன. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவது தொடர்பான அனுமதி கோரி மத்திய அரசின் எந்தத் துறைக்கு விண்ணப்பித்தாலும் அதன்மீது நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் தங்களிடம் இருந்து சாதகமான பதிலை உடனடியாக எதிர்பார்க்கிறேன் என்று தனது கடிதத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஆந்திரத்தில் பெட்ரோல், டீசலுக்கு ஆதார் எண் அவசியம்


வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் எண்ணை அளித்தால்தான் அவர்களுக்கு பெட்ரோல், டீசல் வழங்கும் நடைமுறை ஆந்திரத்தில் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்த விவரம்: ஆந்திர போக்குவரத்துத் துறையினர் மாநிலத்தின் முக்கியமான பெட்ரோல் விற்பனை நிலையங்களில் தனி கவுன்ட்டர்களை திறந்துள்ளனர். இவற்றில், பெட்ரோல். டீசல் வாங்க வரும் வாடிக்கையாளர்கள், தங்களின் ஆதார் அட்டை எண், வாகனத்தின் பதிவெண், ஓட்டுநர் உரிம எண் ஆகியவற்றை அளித்தால்தான் அவர்களுக்கு தேவையான பெட்ரோல், டீசல் தரப்படும். ஆந்திர போக்குவரத்துத்துறையின் இந்த அதிரடித் திட்டம் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.

Saturday, 13 December 2014

உணவே மருந்து : பழங்களின் மகத்துவம்

மாதுளம்பழச் சாறுடன் சமமாக இஞ்சி சாறு கலந்து, இத்துடன் தேன் கலந்து சாப்பிட, நாள்பட்ட வறட்டு இருமல் குணமாகும். நன்றாகப் பழுத்த அரை நேந்திரம் பழத்தை தினமும் இரவு சாப்பிட்டு வந்தால் இதயம் வலிமையாகும். மூச்சு சீராகும். சிறுநீரகக் கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு ஆப்பிள், அல்லது வாழைத்தண்டு ஜூஸ் சாப்பிட்டு வர நல்ல நிவாரணம் கிடைக்கும். ஆனால் வாழைத்தண்டு ஜூஸ் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதும் நல்லதல்ல.

மழைக்காலங்களில் கால் விரல்களுக்கு இடையே உண்டாகும் சேற்றுப் புண் குணமாக மஞ்சள் தூளுடன் தேனைக் கலந்து களிம்பு போல பூசலாம். இரண்டு டீஸ்பூன் தேனை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் வரும். மஞ்சள்காமாலையால் பாதிக்கப்பட்டவர்கள் கீழாநெல்லியை வேரோடு பிடுங்கி நன்றாக அரைத்து பசும்பாலில் கலந்து 9 நாள் குடித்து வர நோய் குணமாகும்.

தினமும் சப்போட்டா பழ ஜூஸ் பருகி வர முடி நன்றாக வளரும். முடி உதிர்வது நிற்கும். பதினைந்து வில்வ இலையை கால் லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைத்துக் குடித்தால் வயிற்றுப்புண் குணமாகும். மோரில் இஞ்சியை நறுக்கிப் போட்டு, கொத்தமல்லி இலையைக் கிள்ளிப் போட்டு குடித்தால் நன்றாகப் பசி எடுக்கும். நெல்லிக்காய் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து சாப்பிட்டால் உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.

வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து கழுவினால் முகப் பருக்கள் நீங்கி புத்துணர்ச்சி பொங்கும். தண்டுக்கீரைச் சாற்றைத் தலையில் தடவி வந்தால் முடி நன்றாக வளரும்; முடி உதிர்வதும் குறையும். மன அழுத்தத்துக்கு மக்னீசியம் சத்து குறைபாடும் ஒரு காரணம். பசலைக்கீரையில் அதிக மக்னீசிய சத்து உண்டு. வாரத்துக்கு ஒரு முறையாவது உணவில் சேர்த்தால் மன அழுத்தம் போயே போச்சு.

மாதுளை ஜூஸை 40 நாள் தொடர்ந்து அருந்தி வந்தால் பெண்களின் மாதாந்திரப் பிரச்னைகள் நீங்கும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். பேரீச்சம்பழம் நகங்களுக்கு வலு தரும். தினமும் இரண்டு பேரீச்சம்பழமும் ஒரு கப் பாலும் சாப்பிட்டால் அழகிய நகம் வளரும்.

சில விசாரணை முறைகள் வெறுக்கத்தக்கவை : சி.ஐ.ஏ. ஒப்புதல்

நியூயார்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதம் தொடர்பான கைதிகளை விசாரிக்க அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. பயன்படுத்திய வழிமுறைகளில் சில வெறுக்கத்தக்கவை எனவும், அரசால் அனுமதிக்கப்படாதவை எனவும் அந்த அமைப்பின் இயக்குநர் ஜான் பிரென்னன் ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரிலுள்ள இரட்டை கோபுரங்கள் மீது அல்-காய்தா பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்த்தியதில் 2,990-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இதனையடுத்து, அமெரிக்கா மேற்கொண்ட பயங்கரவாதத்துக்கு எதிரான போரின்போது, சி.ஐ.ஏ. உளவு அமைப்பு கைதிகளிடம் விசாரணை மேற்கொள்வதற்காக கடைப்பிடித்த வழிமுறைகள் குறித்து, உளவு விவகாரங்களுக்கான நாடாளுமன்ற மேலவைக் குழு விசாரித்து ஓர் அறிக்கை சமர்ப்பித்தது. அதில், போலி மரண தண்டனை நிறைவேற்றம், நிர்வாணப்படுத்துதல், தூங்கவிடாமல் செய்தல் உள்ளிட்ட கடுமையான விசாரணை முறைகளை கைதிகளிடம் சி.ஐ.ஏ. பயன்படுத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

இது, உலக நாடுகளின் கண்டனத்தை அமெரிக்காவுக்குப் பெற்றுத் தந்தது. இந்நிலையில், சி.ஐ.ஏ. இயக்குநர் ஜான் பிரென்னன் செய்தியாளர்களுக்கு அளித்த தன்னிலை விளக்கத்தில் தெரிவித்ததாவது: சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் "மேம்படுத்தப்பட்ட விசாரணை முறை'களை பயன்படுத்திய பிறகே ஒசாமா பின் லேடனைப் பற்றிய விவரங்கள் எங்களுக்குக் கிடைத்தன. அந்த விசாரணை முறைகளால்தான் கைதிகளிடமிருந்து விவரங்களைப் பெற முடிந்ததா, அல்லது வேறு வழிமுறைகளிலேயே விவரங்களைப் பெற முடிந்திருக்குமா என்பது தெரியவில்லை. இந்த விவகாரம் ஆய்வுக்குரியது. விசாரணை அதிகாரிகள் பற்றாக்குறை: இரட்டை கோபுரத் தாக்குதலைத் தொடர்ந்து, சி.ஐ.ஏ. அமைப்பின் தயார் நிலைக்கும் மீறிய உத்தரவுகள் எங்களுக்கு இடப்பட்டன. விசாரணை மேற்கொள்வதில் பயிற்சி பெற்ற அதிகாரிகள் மிகவும் குறைவாக இருந்த நிலையில், பயங்கரவாதிகளை எதிர்கொள்ள நாங்கள் பணிக்கப்பட்டோம்.எங்களது பல அதிகாரிகள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதனால் சி.ஐ.ஏ. அதிகாரிகள் நிலைகுலைந்து போயினர்.
வெறுக்கத்தக்கவை: இந்தச் சூழலில், கைதிகளிடமிருந்து உண்மையை வரவழைப்பதற்காக ஒரு சில நேரங்களில் வெறுக்கத்தக்க, அரசால் அனுமதிக்கப்படாத சில வழிமுறைகளை சில அதிகாரிகள் கடைப்பிடித்தார்கள் என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்றார் ஜான் பிரென்னன்.

நூலகக் கட்டடத்தில் இயங்கும் அரசு உயர்நிலைப் பள்ளி

ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் மாகாண்யம் அரசு உயர்நிலைப் பள்ளி கடந்த மூன்று ஆண்டுகளாக பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற்று வரும் நிலையிலும், அங்கு போதிய வகுப்பறைகள் இல்லாத காரணத்தால் கிராம கிளை நூலகம், ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடங்களில் வகுப்பறைகள் இயங்கி வருகின்றன. கடந்த 1968ம் ஆண்டு அப்போதைய உணவு, வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.மதியழகனால் தொடங்கப்பட்ட இந்த அரசு தொடக்கப்பள்ளி, 1991ம் ஆண்டு அரசு நடுநிலைப்பள்ளியாகவும், 2005ஆம் ஆண்டு அரசு உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் தற்போது, மாகாண்யம், மலைப்பட்டு, அழகூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த சுமார் 300}க்கும் அதிகமான மாணவ மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பாக கட்டப்பட்ட கிளை நூலகம், ஊராட்சிமன்ற அலுவலகம், அங்கன்வாடி மையம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.

இதனால், பள்ளிக்கு வகுப்பறைகள் அமைப்பதற்கான புதிய கூடுதல் கட்டடங்கள் கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, போதிய வகுப்பறை வசதி இல்லாததால் நூலகக் கட்டடம், ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடங்களை மாணவர்கள் தற்போது வகுப்பறைகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். அவற்றில் கிராமசபா கூட்டம், ஊராட்சி சம்பந்தப்பட்ட கூட்டங்கள் நடத்தப்படும் போது மாணவர்கள் வெட்ட வெளியில், வெயிலில் அமர்ந்து பாடம் படிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், ஊராட்சிப் பகுதியிலேயே பல ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு இடம் உள்ளது. அந்த இடங்களை பள்ளிக்கு ஒதுக்க ஊராட்சி நிர்வாகம் தயாராகவே உள்ளது. அவற்றில் கட்டடங்களை கட்டித்தர சில தனிநபர்கள் தயாராகவே உள்ளனர். ஆனால் மாவட்டக் கல்வி நிர்வாகம் இதற்கு அனுமதி மறுத்து வருகிறது. இதுகுறித்து மாவட்டக் கல்வி அலுவலரிடம் கடந்த பத்து ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக இப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவிகித தேர்ச்சி பெற்று வருகின்றனர். போதுமான வகுப்பறைகள் உள்ளிட்ட அவர்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்தால் அவர்களின் கல்வித் தரம் உயரும். மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பள்ளிக்குத் தேவையான புதிய கட்டடத்தை கட்ட மாவட்ட கல்வி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழகத்தில் 4 லட்சம் பேர் எழுதிய குரூப் 2 தேர்வுக்கான முடிவுகளை, அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கூட கட்டுப்பாட்டு அலுவலர் சோபனா வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: உதவியாளர், கீழ்நிலை எழுத்தர், கணக்காளர், நேரமுக எழுத்தர் உள்ளிட்ட குரூப் 2-ஏ பிரிவில் அடங்கிய 2 ஆயிரத்து 846 காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஜூன் 29-ஆம் தேதி நடைபெற்றது. இத் தேர்வை எழுத 4 லட்சத்து 21 ஆயிரத்து 486 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 339 பேரின் தரவரிசை நிலை தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பொது தரவரிசை நிலை (Overall Rank), வகுப்பு வாரியான தரவரிசை நிலையும் (Community wise Rank), சிறப்புப் பிரிவு (Special Category) விண்ணப்பதாரர்களுக்கான தனி தரவரிசை நிலையும் வெளியிடப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற மதிப்பெண், தரவரிசை நிலை ஆகியவற்றை, தங்களது பதிவு எண்ணை (Register Number) பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித்தகுதி, தொழில்நுட்பத் தகுதி, இனம், சிறப்புப் பிரிவு நிலை ஆகியவற்றின் அடிப்படையில் தரவரிசை நிலை வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின் போது, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகவல் தவறானது எனத் தெரிய வந்தால், அவர்கள் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள். விண்ணப்பதாரர்கள் அவர்களின் தரவரிசை நிலை (Ranking Position), காலியிட நிலை (Vacancy Position), இடஒதுக்கீட்டு விதி ஆகியவற்றின் அடிப்படையில் கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவோரின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்படும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சோபனா தெரிவித்துள்ளார்.

நிலக்கரிச் சுரங்க முறைகேடு : மது கோடா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடா, அந்த மாநில முன்னாள் தலைமைச் செயலர் அசோக் குமார் பாசு உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் முன்னிலையில், சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அப்போது விசாரணை அதிகாரி தெரிவிக்கையில், இந்த வழக்குக்கு தேவைப்படும் ஆதாரங்களை இன்னும் சில தினங்களில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாகத் தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி பராசர், குற்றப்பத்திரிகை வரும் 22ஆம் தேதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று அறிவித்தார். முன்னதாக, சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் மது கோடா, பாசு தவிர்த்து, நிலக்கரித் துறை முன்னாள் செயலர் ஹெச்.சி. குப்தா, அரசு அதிகாரிகள் வசந்த் குமார் பட்டாச்சார்யா, விபின் பிகாரி சிங் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், தனியார் நிறுவனமான வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் லிமிடெட்டின் இயக்குநர் வைபவ் துல்சியா மற்றும் விஜய் ஜோஷி என்பவரின் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. இவர்கள் 8 பேர் மீதும், இந்திய தண்டனைச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் சிபிஐயால் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், நிலக்கரிச் சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்டதில், அரசுக்கு ரூ.1.86 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக நாடாளுமன்றத்தில் சிஏஜி தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. நாடு முழுவதும் இந்த ஊழல் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து, இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ விசாரணையில், ஜார்க்கண்ட் மாநிலம், ராஜ்ஹராவில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்கள், வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்துக்கு முறைகேடாக ஒதுக்கப்பட்டது தெரிய வந்தது. இதனால், அந்த நிறுவனம், அதன் இயக்குநர்கள் சஞ்சீவ் குமார், பிரசாந்த், வைபவ், நிஷா, விமல் குமார், நிர்மலா, ஹேமந்த் குமார் அகர்வால், நிலக்கரி அமைச்சக அதிகாரிகள், ஜார்க்கண்ட் அரசு உள்ளிட்டோர் மீது கடந்த 2012ஆம் ஆண்டு சிபிஐ முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்.) பதிவு செய்தது. இதுதொடர்பாக சிபிஐ முதலில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றம் ஏற்காமல் கடந்த செப்டம்பர் மாதம் திருப்பி அனுப்பியது. எனவே, நீதிமன்றத்தில் சிபிஐ மீண்டும் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது.

ஹிண்டால்கோ நிறுவன விவகாரம்: டிச.16-இல் உத்தரவு
ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு எதிரான வழக்கை முடித்துக் கொள்வதாக சிபிஐ தாக்கல் செய்த அறிக்கை மீது வரும் 16ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தில்லி சிறப்பு நீதிமன்றம் தெரிவித்தது. தில்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராசர் இதை அறிவித்தார். ஒடிஸா மாநிலம், தலாபிராவில் உள்ள நிலக்கரிச் சுரங்கங்களை தொழிலபதிபர் குமாரமங்கலம் பிர்லாவுக்குச் சொந்தமான ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு ஒதுக்கியதில் முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ குற்றம்சாட்டியது. மேலும், இதுதொடர்பாக குமாரமங்கலம் பிர்லா, நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பி.சி.பாரேக் உள்ளிட்டோர் மீதும் முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்தது. ஆனால், பிறகு அவர்களுக்கு எதிரான வழக்கை முடித்துக் கொள்வதாகக் கூறி சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது.

மேற்கு வங்க அமைச்சர் மதன் மித்ரா கைது

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மேற்கு வங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ராவை சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். இது, மேற்கு வங்க அரசுக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது. சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு மதன் மித்ராவுக்கு சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். ஆனால், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இதனால், விசாரணை தள்ளிப்போனது. கடந்த நவம்பர் 26ஆம் தேதி அவர் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதையடுத்து அவரை விசாரணைக்கு வருமாறு சிபிஐ அதிகாரிகள் அழைத்தனர். இதையடுத்து, அவர் கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை காலை சென்றார். அவரிடம் அதிகாரிகள் 5 மணிநேரம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த சிறிது நேரத்தில் மதன் மித்ரா கைது செய்யப்பட்டார். அவர், சாரதா குழுமத்தின் ஓர் அங்கமான சாரதா ரியால்டி நிறுவனத்தின் மூலம் சதி, ஏமாற்றுதல், பணம் கையாடல் ஆகியவற்றைச் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சாரதா ரியால்டி நிறுவனம், மேற்கு வங்கத்தில் ரியல் எஸ்டேட் சேவையை செய்து வந்தது.

அமைச்சரைத் தவிர, சாரதா நிதி நிறுவனத்தின் தலைவர் சுதிப்தா சென்னின் ஆலோசகராக செயல்பட்ட நரேஷ் பலோடியாவையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். முன்னதாக, அமைச்சர் மதன் மித்ரா, சிபிஐ அலுவலகம் சென்றதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிதி நிறுவன மோசடி வழக்கில், இதற்கு முன், திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.க்களான குணால் கோஷ், சிருஞ்சய் போஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மம்தா பதவி விலகக் கோரிக்கை: சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் மேற்கு வங்க போக்குவரத்துத் துறை அமைச்சர் மதன் மித்ரா கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, முதல்வர் மம்தா பானர்ஜி ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அந்த மாநில எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பாக பாஜக தேசியச் செயலாளர் சித்தார்த் நாத் சிங் கூறியதாவது: இந்த மோசடி வழக்கு விசாரணை மெதுவாக மம்தாவின் வீட்டை நோக்கிச் செல்கிறது. இந்த ஊழலில் திரிணமூல் காங்கிரஸ் தலைமை கழுத்து வரை ஊறித் திளைப்பதை மதன் மித்ராவின் கைது காட்டுகிறது. இந்த விவகாரத்தில் தார்மிகப் பொறுப்பேற்று மம்தா பானர்ஜி ராஜிநாமா செய்ய வேண்டிய நேரம் இது. தற்போது குணால், சிருஞ்சய், மதன் ஆகியோர் சிறையில் உள்ளனர். இந்த வரிசையில் அடுத்ததாக முகுல், மம்தா ஆகியோர் இனிவரும் ஆண்டுகளில் இடம்பெறுவார்கள் என்றார் சித்தார்த் நாத் சிங். மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சூர்யகாந்த மிஸ்ரா கூறுகையில், ""சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக முதல்வர் மம்தாவிடம் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.

இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யான முகமது சலீம் கூறியதாவது: மதன் மித்ரா ஓர் அமைச்சர் மட்டுமின்றி, மம்தா பானர்ஜியின் நெருங்கிய சகாவாகவும் இருக்கிறார். திரிணமூல் காங்கிரஸ் நடத்தும் பொதுக்கூட்டங்களுக்கு ஆள்களைத் திரட்டும் நபராகவும் இருக்கிறார். மேற்கு வங்க மக்கள் தற்போது பொறுமை இழந்து வருகின்றனர். சாரதா நிதி நிறுவன விவகாரத்தில் மேலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றனர் என்றார் அவர்.மதன் மித்ரா கைது விவகாரம் தொடர்பாக மம்தா விளக்கமளிக்க வேண்டும் என்று மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் அப்துல் மன்னனும் கோரியுள்ளார். குணால் கோஷுக்கு காவல் நீட்டிப்பு: இதனிடையே, சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. குணால் கோஷின் நீதிமன்றக் காவல் இம்மாதம் 22ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை:  மாநில அமைச்சர் மதன் மித்ரா கைது செய்யப்பட்டது தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கொல்கத்தா தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தற்போது நடந்துள்ளது (அமைச்சர் கைது) சட்டவிரோதம் மட்டுமின்றி, அரசியல் சாசனத்துக்கு எதிரானதுமாகும். ஜனநாயக அமைப்புகளைச் சீர்குலைப்பதற்கான அபாயகரமான நடவடிக்கை இது. மதன் மித்ராவின் கைதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். இது பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை மட்டுமின்றி, மலிவான சதிச் செயலுமாகும். என்னை முதலில் கைது செய்யுமாறு பிரதமரைக் கேட்டுக் கொள்கிறேன். இந்த வழக்கில் மதன் மித்ராவை முதலில் சாட்சி என்று கூறினர். தற்போது அவரைக் கைது செய்துள்ளனர். மதன் மித்ராவை மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அதிகாரிகள் அழைத்துச் செல்லும்போது அங்கு அவரைச் சந்திக்க உள்ளேன். நரேந்திர மோடியும் அமித் ஷாவும் தங்களிடம் உள்ள போலீஸாரைக் கொண்டு என்னைக் கைது செய்யட்டும். அவர்களின் முகத்திரையைக் கிழிப்போம். அவர்களை எதிர்த்து நாங்கள் தில்லியில் போராட்டம் நடத்துவோம். சிபிஐ அமைப்பால் கைது செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்ட ஒரு நபர் (அமித் ஷா) தற்போது எங்களை நோக்கி புகார் கூறுகிறார். மதன் மித்ரா கைதைக் கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் சனிக்கிழமை முதல் தெருக்களில் இறங்கிப் போராடும். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் எழுப்புவோம் என்றார் மம்தா.

Friday, 12 December 2014

உணவே மருந்து : முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்

முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது.
  • முடக்கத்தான் கீரையை எண்ணெயில் வதக்கி மிளகாயும், உப்பும் சேர்த்துத் துவையல் அரைத்துத் தொடு கூட்டன்கப் பயன்படுத்தினால் சுவையாக இருக்கும்.
  • இந்தக் கீரையைச் சன்னமாக நறுக்கி வெங்காயம் அதிகமாகச் சேர்த்துப் பொரியல் செய்தும் சாப்பிடலாம். கொடியை மிளகு, சீரகத்துடன் சேர்த்து ரசம் வைக்கலாம்.
  • துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம். அதோடு, அடை செய்வதற்கும், தோசை மாவை புளிக்க வைப்பதற்கும் இந்தக் கீரையை அரைத்துச் சேர்த்துக்கொள்ளலாம்.
  • முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.
  • இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டன்ல் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
  • இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.
  • வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும்.

சீனா : ஜின்ஜியாங் பகுதியில் பர்தாவுக்குத் தடை

சீனாவில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஜின்ஜியாங் மாகாணத்தில், முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியைச் சேர்ந்த உய்குர் இனத்தவருக்கும், சீன ஹன் இனத்தவருக்கும் இடையில் நீண்டகாலமாக பதற்றம் நிலவி வருகிறது. அண்மைக் காலமாக நிகழ்ந்து வரும் இன மோதல்களிலும், பயங்கரவாதத் தாக்குதல்களிலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், பயங்கரவாதச் செயல்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அந்தப் பகுதியில் பர்தா அணிந்து வருவதற்குத் தடை விதிப்பது என புதன்கிழமை அதிகாரிகள் முடிவு செய்தனர். இது, மத உரிமையைப் பறிக்கும் செயல் என ஒரு சாரார் குற்றம் சாட்டியுள்ளனர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media