தமிழக மீனவர்கள், சிங்கள கடற்படையினரால் கைது செய்யப்படும் விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார், பாமக நிறுவனர் ராமதாஸ். அதில் அவர் கூறியிருப்பதாவது:
நேற்று முன்னாள் மியான்மரில் ராஜபக்சேவை சந்தித்து பேசிய பிரதமர் மன்மோகன் சிங், தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினையை மனித நேயத்துடன் அணுகும்படி கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு ராஜபக்சே ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால், இந்த சந்திப்புக்கு அடுத்த நாளே தமிழக மீனவர்களை சிங்களப்படை அத்துமீறி கைது செய்துள்ளது என்பதிலிருந்தே இந்தியப் பிரதமருக்கு இலங்கை எந்த அளவுக்கு மரியாதை தருகிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இது பிரதமருக்கு மட்டுமின்றி, இந்திய இறையாண்மைக்கும் இழைக்கப்பட்ட அவமானமாகும்.
ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த 121 மீனவர்கள் இலங்கைச் சிறையில் வாடிக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது மேலும் 57 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எந்த விதிக்கும் கட்டுப்படாமல் இந்தியாவை தொடர்ந்து வம்புக்கு இழுக்கும் இலங்கையிடம் இனியும் மென்மையான அணுகுமுறையை கடைபிடிப்பதில் எந்த பயனும் இல்லை.
எனவே, இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் 178 மீனவர்களையும் அவர்களின் படகுகளுடன் அடுத்த 24 மணி நேரத்தில் விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கையை இந்திய அரசும், தமிழக அரசும் எச்சரிக்க வேண்டும். அதன்படி, மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசு மறுத்தால், தமிழக மீனவர்களை கடத்தியதாக ராமேஸ்வரம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் சிங்கள கடற்படையினரை சர்வதேச காவல்துறை (இண்டர்போல்) உதவியுடன் கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.