BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 13 March 2014

கருணாநிதி தேர்ந்தெடுத்த விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர் ரவிக்குமார்?!




விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் முதலில் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்பட்டது, அதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், அதன் தலைவர் திருமாவளவனும் கடும் அதிருப்தி அடைந்தனர். சலசலப்புகள் அடங்கிய பின் இரண்டாவதாக திருவள்ளூர் தொகுதியை திமுக விடுதலை சிறுத்தைகளுக்கு ஒதுக்கியது.

இந்த இரண்டு நாட்களில் பல பேச்சுவார்த்தைகள் விடுதலை சிறுத்தைகளுக்கும் திமுகவிற்கும் இடையில் நடந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இம்முறை திமுக கூட்டணியில் ஒதுக்கீடுகளை மு.க.ஸ்டாலின் முன்னின்று முடிவு செய்துள்ளார், ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகளுக்கு ஒரு தொகுதிக்கு மேல் ஒதுக்க வேண்டாம் என்றும் இதற்கு விடுதலை சிறுத்தைகள் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் கூட்டணியை விட்டு தாராளமாக வெளியேறலாம் என்றும் கூறிவிட்டார்.

கூட்டணி தர்மத்தை கடைபிடித்தோம், விசுவாசமாக இருந்துள்ளோம் என்றெல்லாம் எடுத்துக்கூறியும் இன்னொரு சீட்டிற்கு திமுக தயாராக இல்லை, அப்போது தான் அந்த திட்டத்தை சிறுத்தைகள் தலைமையிடம் திமுக கூறியது, இன்னொரு தொகுதி தருகிறோம், ஆனால் வேட்பாளராக நாங்கள் சொல்பவர்களை தான் போட வேண்டும் என்பது தான் அந்த திட்டம்.

அப்படியாக திமுக தலைவர் கருணாநிதியால் டிக் அடிக்கப்பட்டவர் தான் ரவிக்குமார் என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு நிலவுகின்றது. ரவிக்குமார் தலித் எழுத்தாளர், அறிவுஜீவி என அறியப்பட்டவர், 2006ல் விடுதலை சிறுத்தைகள் சார்பில் அதிமுக கூட்டணியில் காட்டுமன்னார் கோவில் தொகுதியில் நின்று வெற்றிபெற்றவர், அதிமுக கூட்டணியில் இருந்து விசிகவை திமுக கூட்டணிக்கு இழுத்து சென்றவரும் இவர் தான். 2011ல் அதே தொகுதியில் திமுக கூட்டணியில் நின்று தோல்வி அடைந்தார், 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது திமுகவோடு கூட்டணி வேண்டாம், அதிமுகவுடன் கூட்டணி சேரலாம் என்று விடுதலை சிறுத்தைகள் தலைமை முயன்ற போதும் திருமாவளவனை திமுக கூட்டணியிலே இருக்க வைத்தவர் ரவிக்குமார் எம்.எல்.ஏ தான். அறிவுஜீவியாக அறியப்பட்ட ரவிக்குமார் எம்.எல்.ஏ ஆனபோது பலரும் ரவிக்குமாரிடம் நிறைய நல்ல விஷயங்களாஇ எதிர்பார்த்தனர், ஆனால் அவரோ ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் ஈடுபட்டு கோடிகளை குவித்தார் என்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.

முதன் முறை எம்.எல்.ஏ ஆன பின்பு  இனிமேல் தேர்தலில் நிற்க மாட்டேன். இந்த ஒரு அனுபவம் போதும். தேர்தல் மட்டுமல்லாது புதிய களங்களில் பணியாற்ற வேண்டியிருக்கிறது. எழுத்து, வாசிப்பு ஆகியவற்றில் முன்பை விடவும் தீவிரமாக ஈடுபடும் எண்ணமும் இருக்கிறது. குறிப்பாகப் படைப்பிலக்கியம் நோக்கி என் கவனத்தை அதிகப்படுத்த விரும்புகிறேன் என்று ஜூன் 2006  ‘காலச்சுவடு’ இதழில் பேட்டியளித்திருந்தாலும் அதன் பின் சட்டமன்ற தேர்தலில் நின்றவர் தான் ரவிக்குமார்.

விடுதலை சிறுத்தைகளின் இரண்டாவது தொகுதியில் ரவிக்குமாரை வேட்பாளராக திமுக முடிவு செய்தது என்று வெளியாகும் தகவல்கள் படையப்பா படத்தில் மாப்பிள்ளை இவர் தான் ஆனால் இவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையது என்ற காமெடியை நினைவு படுத்துகிறது.



Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media