மாற்றுத் திறனாளிகளுக்கான, ஆசிரியர் பணியிடங்களில், பின்னடைவு காலியிடங்களை நிரப்ப, சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதுகுறித்து, பதிலளிக்கும்படி, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் உரிமை சங்கத்தின், மாநில செயலர் நம்புராஜன், தாக்கல் செய்த மனு: உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்துறை, கடந்த மார்ச் மாதம், ஒரு அரசாணையை வெளி யிட்டது. 'வெவ்வேறு துறைகளில் உள்ள பின்னடைவு காலியிடங்களை, சிறப்பு தேர்வு மூலம் நிரப்ப வேண்டும்' என, அதில் கூறப்பட்டுள்ளது. அந்த அரசாணையின்படி, ஆசிரியர் தேர்வு வாரியம், 1,107 பின்னடைவு காலியிடங்களை, மாற்றுத் திறனாளிகளைக் கொண்டு நிரப்ப வேண்டும். இந்த பின்னடைவு காலியிடங்களை நிரப்பாமல், கடந்த மாதம், புதிதாக பட்டதாரி ஆசிரியர் தேர்வு அறிவிப்பை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. முதலில், காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும். பின்னடைவு காலியிடங்களை நிரப்பாததால், மாற்றுத் திறனாளிகளின் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கடந்த மாதம், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட அறிவிப்பை, ரத்து செய்ய வேண்டும். பின்னடைவு காலியிடங்களை நிரப்பிவிட்டு, புதிய அறிவிப்பை வெளியிட, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
இம்மனு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்திய நாராயணன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் பதிலளிக்க, அரசு பிளீடர் மூர்த்தி, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், சிறப்பு அரசு பிளீடர் கிருஷ்ணகுமார், 'நோட்டீஸ்' பெற்று கொண்டனர். இரண்டு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்யவும், பின்னடைவு காலியிடங்களை நிரப்ப, சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அதுபற்றி தெளிவுபடுத்தவும், அரசுக்கு, 'முதல் பெஞ்ச்' உத்தரவிட்டது. விசாரணையை, அக்டோபர், 7ம் தேதிக்கு, தள்ளி வைத்தது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.