தமிழக ஆளுநர் ரோசைய்யாவை இன்று சந்தித்து புதிய ஆட்சி அமைக்க உரிமை
கோரினார் அதிமுக சட்டமன்ற குழுத் தலைவரான ஓ. பன்னீர்செல்வம்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறைத்
தண்டனை பெற்றதால் தமது பதவியை இழந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக
தலைமையகத்தில் எம்.எல்.ஏக்கள் ஒன்று கூடி ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக
சட்டமன்றத்தின் குழுவின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து நேராக போயஸ் கார்டன் சென்ற ஓ.பன்னீர்செல்வம் மாலை 6 மணி
வரை காத்திருந்தார். பின்னர் ராகு காலம் முடிந்து 6.05 மணிக்கு அங்கிருந்து
ஆளுநர் மாளிகை நோக்கி ஓ. பன்னீர்செல்வம் புறப்பட்டார்.
ஆளுநர் ரோசைய்யாவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்
ஓ.பன்னீர் செல்வம்!
அவருடன் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி
பழனிச்சாமி ஆகியோரும் ஆளுநரை சந்திக்க சென்றனர். அங்கு ஆளுநர் ரோசைய்யாவை
சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக சட்டமன்றக் குழுவின் தலைவராக தாம்
தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை அவரிடம் ஒப்படைத்து புதிய ஆட்சி அமைக்க உரிமை
கோரினார்.
அத்துடன் புதிய அமைச்சர்களின் பட்டியலையும் ஆளுநர் ரோசைய்யாவிடம்
கையளித்துவிட்டு திரும்பியது ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக குழு.
இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு
விடுப்பார். அதன் பின்னர் ஆளுநர் மாளிகையில் நாளை ஓ.பன்னீர்செல்வம் மற்றும்
அமைச்சர்களுக்கு ஆளுநர் ரோசைய்யா பதவி பிரமாணம் செய்து வைப்பார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.