BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 16 September 2014

உள்ளாட்சி இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரி பாஜக வழக்கு

சென்னை ஐகோர்ட்டில், பாரதீய ஜனதா கட்சியின் தலைமை அலுவலக செயலாளர் கே.சர்வோத்தமன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துகளில் மொத்தம் 281 பதவிகளுக்கு வருகிற 18-ந் தேதி இடைத்தேர்தல் நடத்துவதாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த ஆகஸ்ட் 28-ந் தேதி உத்தரவிட்டது. இந்த இடைத்தேர்தல் நடவடிக்கை அனைத்தும் சட்டவிரோதமாகவும், நேர்மையற்ற முறையிலும், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவும் நடைபெறுகிறது.

மொத்தம் 281 பதவிக்கு நடைபெறும் தேர்தலில் எங்கள் கட்சியின் சார்பில் 122 பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில், பல வேட்பாளர்களை வேட்புமனுவைக் கூட தாக்கல் செய்ய முடியாத அளவுக்கு ஆளும் கட்சியினர் மிரட்டி, தடுத்து விட்டனர். அதையும் மீறி வேட்புமனுவை தாக்கல் செய்த எங்கள் கட்சியின் வேட்பாளர்களின் கையெழுத்தை போலியாக போட்டு, வேட்பாளர்களுக்கு தெரியாமலேயே வேட்புமனுவை திரும்ப பெற வைத்துள்ளனர்.

எங்கள் கட்சியை சேர்ந்த 122 வேட்பாளர்களில் வெறும் 83 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் மட்டுமே தேர்தல் அதிகாரிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள வேட்பாளர்கள் ஆளும் கட்சியினரால் மிரட்டப்பட்டு வாபஸ் பெற வைக்கப்பட்டுள்ளனர்.

இதுசம்பந்தமாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளான கலெக்டர்கள், சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, உள்ளாட்சி இடைத்தேர்தலை நடத்துவதற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையருக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும். மேலும், செப்டம்பர் 18-ந் தேதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவதாக கடந்த ஆகஸ்டு 28-ந் தேதி மாநில தேர்தல் ஆணையர் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யவேண்டும். அந்த அறிவிப்புக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வருகிறது.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media