BREAKING NEWS

Ads

உலகம்

Tuesday, 16 September 2014

இந்தியா–வியட்னாம் இடையே ஒப்பந்தம்: ஆயுத கொள்முதலுக்கு இந்தியா ரூ.600 கோடி கடனுதவி

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி 4 நாள் சுற்றுப் பயணமாக தெற்கு ஆசிய நாடான வியட்னாமிற்கு நேற்று முன்தினம் சென்றார். நேற்று தலைநகர் ஹனோயில் அவர் ஜனாதிபதி டிரவுங் டாங் சாங்கை சந்தித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தினார். குறிப்பாக இரு நாடுகளும் பொருளாதார துறையில் ஒன்றாக இணைந்து செயலாற்றுவது குறித்து பேசப்பட்டது.

முன்னதாக, உயர் மட்ட அளவிலான அதிகாரிகள் குழுவினர் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார, ராணுவம், பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைத்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இறுதி செய்தனர்.

1. இந்தியாவின் ஓ.என்.ஜி.சி. விதேஷ் நிறுவனமும், வியட்னாமின் பெட்ரோ வியட்னாம் நிறுவனமும் தென் சீனக் கடல் பகுதியில் எண்ணெய் துரப்பண பணிகளை கூட்டாக இணைந்து மேற்கொள்வது. கடல்வழிப் பாதையில் பாதுகாப்பு, கடற்கொள்ளையர்களை விரட்டியடித்தல், கடலில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் உதவுதல் போன்றவை இதில் முக்கிய அம்சங்களாகும்.

2. இந்தியாவில் இருந்து ஆயுதங்கள் கொள்முதலுக்காக வியட்னாம் நாட்டுக்கு 600 கோடி ரூபாயை இந்தியா கடனுதவியாக அளிப்பது.

3. இரு நாடுகளுக்கும் இடையே ஆகாய வழித் தொடர்பை ஏற்படுத்தும் விதமாக நேரடி விமான சேவையை வருகிற நவம்பர் மாதம் 5–ந்தேதி தொடங்குவது.

4. விலங்குகளின் நலத்தை பராமரிப்பது.

5. பான்காசியஸ் மீன்வளத்தை இந்தியாவில் பெருக்கும் வகையில் பண்ணைகள் அமைக்க ஒத்துழைத்தல்.

6. இளைஞர் விவகாரம் மற்றும் அவர்களை திறனை மேம்படுத்துதல்.

7. பொதுவான விஷயங்களில் இரு நாடுகளும் பரஸ்பர உதவி அளித்தல் மற்றும் கூட்டாக இணைந்து செயல்படுதல்.

மேற்கண்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தான பிறகு இரு நாடுகளின் சார்பிலும் ஒரு கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மூலம் கொள்கை ரீதியான விஷயங்களில் மிக நெருக்கமாக இணைந்து செயல்படுவது என இரு நாடுகளின் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் இரு நாடுகளும் ஒத்துழைத்து பணியாற்றுவது இந்த ஒப்பந்தங்களில் முக்கியத் தூண் போன்றதாகும். இந்த ஒப்பந்தம் இரு தலைவர்களுக்கும் மிகவும் திருப்தி அளிப்பதாக அமைந்து இருந்தது. மேலும், சர்வதேச சட்ட விதி முறைகளின்படி கிழக்கு கடல் மற்றும் தென் சீனக் கடல் வழிகளில் தாமதமற்ற சுதந்திரமான கடல் பயணத்திற்கான நடவடிக்கைகளில் கூட்டாக செயல்பட இரு நாடுகளின் தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். வியட்னாமின் ஆயுத கொள்முதலுக்காக 600 கோடி ரூபாய் அளவிற்கு இந்தியா கடனுதவி அளித்திருப்பது, இரு நாடுகளின் உறவிலும் புதிய அணுகுமுறைகளுக்கான வழிகளைத் திறந்து விட்டிருக்கிறது.

2020–ம் ஆண்டுக்குள் இரு நாடுகளின் வர்த்தக உறவை 90 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிப்பது எனவும் இதற்கான வாய்ப்புகளாக சுற்றுலா, ஆடைகள், ஜவுளிகள், மருந்து, விவசாய துறைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். ஆசியாவின் அமைதி, ஸ்திரத்தன்மை, வளர்ச்சி, செழிப்பிற்கு இரு நாடுகளும் இணைந்து ஒருங்கிணைந்து பங்காற்றுவது என இரு தலைவர்களும் விருப்பமும், உறுதியும் தெரிவித்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது. 
இதன்பிறகு பிரணாப் முகர்ஜியும், டிரவுங் டாங் சாங்கும் இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். அதன் விவரம் வருமாறு:–


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media